Pages

Monday, March 07, 2016

746 மெட்ரிக் பள்ளிகளின் தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது:தமிழக அரசு


விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுவதற்கு  பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக  2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன.

இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரமில்லாத அனைத்துப் பள்ளிகளையும் 2015-16-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்படும் மாணவர்களை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற வலியுறுத்தி ``மாற்றம் இந்தியா'' அமைப்பின் இயக்குநர் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விவாதத்தின் போது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவில், "746 பள்ளிகளிலும் படிக்கும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே தாற்காலிக அங்கீகாரம் நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தொடர்புடைய 746 பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரமானது மேலும் நீட்டிக்கப்படாது என உறுதியளித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment