Pages

Wednesday, May 27, 2015

இந்த ஆண்டு ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறுமா?விரக்தியில் ஆசிரியர்கள்

இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர். அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலை, துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும். இதன்மூலம், பணிமூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பெறுவர்.

இன்னும் நான்கே நாள்...: இந்த ஆண்டு காலியாக உள்ள இடங்களுக்கு, பணியிட மாறுதல் உத்தரவு பெற, ஆசிரியர்கள் ஆர்வமாக இருந்தனர். வரும் 1ம் தேதி, பள்ளி திறக்க உள்ள நிலையிலும், கலந்தாய்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித் துறை அறிவிக்காதது, ஆசிரியர் மத்தியில், விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டில் தாமதமாக, ஜூன், ஜூலை மாதங்களில், கலந்தாய்வு நடந்தது. இதனால், பள்ளி வேலை நாளில், ஆசிரியர்கள் பலர் விடுமுறை எடுத்து, கலந்தாய்வில் பங்கேற்றனர். இன்னும் நான்கு நாளில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதுவரை, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. கோடை விடுமுறையில் கலந்தாய்வு நடத்தியிருந்தால், இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், ஜூன் 1ம் தேதியே, சம்பந்தப்பட்ட புதிய பள்ளிகளுக்கு சென்று பணியில் சேர்வர்.

குடும்பத்தை, மாற்றுவதற்கும் வசதியாக இருந்திருக்கும். மாணவர்களுக்கு பாதிப்பு: பள்ளி துவங்கிய பின் கலந்தாய்வு நடத்தினால், ஒரு பள்ளியில், ஒரு மாதம் பாடம் நடத்திய பின், அந்த ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாறிச் செல்வர். அதே பாடத்துக்கு, வேறு ஒரு ஆசிரியர் வருவதால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிப்பு பாதிக்கும். ஒரே சிக்கல்...:

பள்ளி திறந்த பின், வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தால், தங்கள் குழந்தைகளுக்கு, வேறு பள்ளியில், 'சீட்' பெற முடியாத நிலையும் ஏற்படும். மொத்தத்தில், பள்ளி திறந்த பின் கலந்தாய்வு நடத்தினால், ஆசிரியர்கள், பல சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment