Pages

Friday, November 28, 2014

அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் பிறந்ததினக் கொண்டாட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

  திருவள்ளுவர் பிறந்த தினம் அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா உறுப்பினர் தருண்விஜய் முன்வைத்த கோரிக்கையை ஏற்பதாக மாநிலங்களவையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்தார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தருண்விஜய், திருவள்ளுவர் பிறந்த தினத்தை நாடுமுழுவதும் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நாட்டின் மிகப்பழமையும், சிறப்பும் வாய்ந்த செம்மொழியான தமிழுக்கு, வட மாநிலங்கள் உரிய மதிப்பளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அவரது இந்தக் கருத்தை, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி உறுப்பினர் ராம் கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஹமத் ஹசன், திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் உட்பட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

உடனடியாக இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஸ்மிருதிராணி, தருண்விஜயின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு முதல் வடமாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதுடன், திருக்குறளைக் கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்மிருதி ராணி உறுதியளித்தார்.

No comments:

Post a Comment