Pages

Monday, July 21, 2014

பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு 25, 26-இல் பணி நியமனக் கலந்தாய்வு


பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26 தேதிகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.  இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு 1,395 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.   இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

பணி நாடுநர்கள் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலக கலந்தாய்வு மையத்தில் பங்கேற்க வேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.  சொந்த மாவட்டஙகளில் போதிய காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும் ஜூலை 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி கல்வி அலுவலர் அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.  

இதில் பங்கேற்கும் பணி நாடுநர்கள் கலந்தாய்வு மையத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், ஜாதி சான்று, இதர ஆவணங்களைத் தவறாமல் கொண்டு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment