Pages

Friday, May 03, 2013

ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான விண்ணப்பப்படிவங்களை வழங்காத தனியார் பள்ளிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அறிமுக வகுப்புகளில் 25 சதவீத ஏழை மற்றும் சமூக ரீதியாக நலிந்த பிரிவு மாணவர்களைச் சேர்க்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை மே 2-ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீடு தொடர்பாக, எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை.

விண்ணப்பப் படிவங்களும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்: தனியார் பள்ளிகளில் ஏழை, நலிந்த பிரிவு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்காமல் உள்ளது சட்டத்தையும், அரசாணையையும் மீறும் செயலாகும். இந்த மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்காத பள்ளிகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஏழை மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பள்ளிகள், பொதுமக்கள் பார்வையில் படும் வண்ணம் தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கையை கோரும் மாணவர்களுக்கான விண்ணப்பப் படிவம் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்த விண்ணப்பம் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment