Pages

Wednesday, December 05, 2012

டி.இ.டி., தேர்வு பெற்றவர் விவரம் இணையதளத்தில் வெளியீடு

  டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்ற, 18 ஆயிரத்து, 382 பேரின் பெயர் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த தேர்வுகளில், தேர்வு பெற்றவர்களின், இறுதி பட்டியலை, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., வெளியிட்டது.

அதன்படி, இரு தேர்வுகளிலும், 18 ஆயிரத்து, 382 பேர், தேர்வு பெற்றனர். இவர்களின், பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின், www.trb.tn.nic.in இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளோமா என்பதை அறியலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்திய போது, முதல் தாள்களில் (ஜூலை, அக்டோபர்), 449 பேரும், இரண்டாவது தாள்களில், 84 பேரும், "ஆப்சென்ட்' ஆயினர். இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத இவர்களுக்கு, டி.ஆர்.பி., மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, ஆப்சென்ட் ஆனவர்கள், உரிய காரணத்தை குறிப்பிட்டு, வரும், 10ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தில், விண்ணப்பம் தர வேண்டும். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான நபர்களை, இறுதி பட்டியலில் சேர்க்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதிகளவில், விண்ணப்பம் வந்தால், ஏதாவது ஒரு தேதியில், அனைவரையும், சென்னைக்கு அழைத்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்திடவும், டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. மேலும், 1,567 பேர், உரிய கல்வித் தகுதி இல்லாதவர்கள் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இவர்கள், மீண்டும், விண்ணப்பம் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்வு பெற்ற, 47 பேர், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை வழங்கவில்லை. எனவே, இவர்களின் முடிவுகள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவர்களும், 10ம் தேதி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment