இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 11, 2015

பத்தாம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயம்.பள்ளிக்கல்வித் துறை அதிரடி

பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.

2006-07ம் ஆண்டு 1ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் முதன் முதலாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்கள் தமிழ்பாடத்தை பகுதி 1ல் கட்டாயமாக எழுத வேண்டும். பகுதி 1ல் தமிழ்மொழி பாடம் தவிர பிற மொழியை பயின்று வந்த மாணவர்கள் 2015-16ம் கல்வியாண்டில் பகுதி 1ல் தமிழ்தேர்வு எழுத இயலாத நிலை ஏற்பட்டால் அதற்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியரும், பள்ளி தாளாளரும் பொறுப்பேற்க வேண்டும்.

வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1ல் தமிழ் மொழி தேர்வு நடத்தப்படும். பிற மொழிகளில் எழுத முடியாது. இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்

Sunday, May 10, 2015

இரண்டு ஆண்டு பிஎட் படிப்பை அமல்படுத்தாவிட்டால் அனுமதி ரத்து

'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி யியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன. வழிகாட்டுதல் தமிழகத்தில், 589 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், ஓராண்டு பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பு கள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு முழுவதும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை, என்.சி.டி.இ., 2014ல் வெளியிட்டது.

அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பு காலம், 2015 - 16ம் கல்விஆண்டு முதல், இரண்டு ஆண்டு களாக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. புதிய விதிகளின் படி, பி.எட்., படிப்பில், தகவல் தொழில்நுட்ப கல்வி, யோகா, பாலின கல்வி, மாற்றுத்திறன் - ஒருங்கிணைப்பு கல்வி போன்றவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இதேபோல், பி.எட்., பட்டப்படிப்பு 'தியரி, ப்ராக்டிக்கல்' மற்றும் 'இன்டர்ன்ஷிப்' (நேரடி களப்பயிற்சி) என, பிரிக்கப்பட்டுள்ளன. இப்பாடத் திட்டத்துக்கு ஏற்ப, புதிய கட்டடங்கள், ஆய்வகம், கூடுதல் ஓராண்டுக்கான கூடுதல் வகுப்பறைகள், புதிய பாடத்துக்கான கூடுதல் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை கல்லுாரிகள் செய்ய வேண்டும்.

ஆனால், புதிய விதிமுறைகளுக்கு எதிராக, தமிழக தனியார், பி.எட்., கல்லுாரிகள், சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அனைத்து, பி.எட்., - எம்.எட்., கல்லுாரிகளுக்கும், என்.சி.டி.இ., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், புதிய விதிமுறைப்படி, 2015 - 16ம் கல்வியாண்டில், பி.எட்., - எம்.எட்., படிப்பு காலம், இரண்டு ஆண்டுகளாகும். மேலும், மாணவர்கள் எண்ணிக்கையை, நிபந்தனைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய வேண்டும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால், கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் தானாகவே ரத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகம் அதேநேரம், இரண்டு ஆண்டு, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான பாடத்திட்டத்தை, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை தயாரித்து, அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது. ஆனால், அரசின் சார்பில் புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி வழங்கவோ, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவோ நடவடிக்கை எடுக்காததால், வரும் ஜூன் முதல், மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. - நமது நிருபர் - இதனால், ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் குழப்பமடைந்துள்ளன.

அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

அமெரிக்காவில் நடந்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், பிரபல'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில், புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகள், இணையதளம் மூலம் கற்பிப்பதில் புதுமை புகுத்திய ஆசிரியர்களின் படைப்புகளை அமெரிக்காவை சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் 'மைக்ரோசாப்ட்' ஆய்வு செய்தது.

இதில் தேர்வான ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, டில்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற, செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர், திலிப், அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றக தேர்வு செய்யப்பட்டார்.அதன்படி, திலிப்குமார் உள்ளிட்ட 13 இந்தியர்கள் மற்றும் 87 நாடுகளை சேர்ந்த, 300 பேர் அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். இதில், 100க்கு 74 மதிப்பெண் பெற்று, ஆசிரியர் திலிப், 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்வியாளராக தேர்வானார்.ஆசிரியர் திலிப்பின் தகவல் தொழில்நுட்பத்தையும், பயிற்று முறையையும் 'மைக்ரோசாப்ட்' நிறுவன சி.இ.ஓ., சத்தியா நாதல்லா பாராட்டினார்.

கருத்தரங்கில் பங்கேற்ற பல்வேறு நாட்டு ஆசிரியர் குழுக்களை, வேறு நாட்டு பள்ளிகளுடன் இணைத்து, உலக அளவிலான கல்வியை கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்து, மைக்ரோசாப்ட் நிறுவன கல்விக்கான துணைத் தலைவர் ஆண்டனி சல்சிடோ அறிவித்தார். இதன்படி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், தைவான் ஆகிய நாடுகளில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இணைந்து கற்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதுடன், நாடுகளுக்கிடையிலான கலாசார பகிர்வு ஏற்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்கள் இடமாற்றமா?

பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், சாதாரண, ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் படித்தால், நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் கிடைக்காவிட்டால் பொறியியல், மருத்துவம், சி.ஏ., மற்றும் முன்னணி அறிவியல் பாடப் பிரிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க முடியாது. இதனால், சமூக அளவில் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம், மிக மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் மாணவர்கள் முன்னணி இடத்துக்கு வராதது, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பல வகையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், தற்போதைய நிலைமையை சமாளிக்க, அரசு பள்ளிகளின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வர, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தேர்ச்சி குறைவு மற்றும் மதிப்பெண் குறைந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள், பள்ளிகள் பட்டியல்களை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மோசமான செயல்பாடுகள் உறுதி செய்யப்படும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை இடமாற்றவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை

'ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் சரியாகப் பாடம் நடத்தாததே, பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைய காரணம்' என, கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், 'ஓபி' அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவை கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

நடந்து முடிந்த, பிளஸ் 2 தேர்வில், மெட்ரிக் பள்ளிகளே மாநிலத்தில் முதல் மூன்று இடங்களையும்; மாவட்டத்தில் முதல் இடங்களையும் பிடித்தன. அரசு பள்ளி மாணவர்கள், மாவட்டங்களில் கூட முதலிடம் பிடிக்கவில்லை. இதேபோல், பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பள்ளிகள், 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் மெட்ரிக் பள்ளிகளை (97.67) விட, 13.41 சதவீதமும்; அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளை (93.42) விட, 9.16 சதவீதமும், அரசு பள்ளிகள் குறைந்துள்ளன. அதிருப்தி: கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகள், மாநில, 'ரேங்க்' பெறாமல், பரிதாபமான நிலைக்கு சென்றுள்ளதால், அரசு பள்ளிகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்,

'ஆசிரியர்களின் கவனக்குறைவு, பள்ளிக்கு ஒழுங்காக வந்து பாடம் நடத்தாமை' போன்றவையே, இதற்கு காரணங்கள் என கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: *அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் பலர், பள்ளிகளில் பாடம் நடத்துவதை விட, தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாக, 'டியூஷன்' எடுப்பதிலேயே, அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால், பள்ளிகளில் முழுமையாக பாடம் நடத்தாமல், 'டியூஷன்' வர வைத்து, 'போர்ஷன்' முடிக்கின்றனர்; 'டியூஷன்' போக முடியாத, நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது.

* பள்ளிகளில் பெயரளவில், ஒவ்வொரு நாளும் சில பக்கங்களைக் குறித்துக் கொடுத்து விட்டு, வீட்டில் படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்.

கண்காணிப்பு: *பல ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்று விடுகின்றனர். தலைமை ஆசிரியர்களும் இதைக் கண்டு கொள்வதில்லை.

*ஆய்வகங்களில் பெரும்பாலும், செய்முறைப் பயிற்சிக்கு வாய்ப்பு தருவதில்லை. மாறாக ஆய்வகப் பொருட்களை பயன்படுத்துவதாக, கணக்கு காட்டும் நிலை உள்ளது. *காலை, மாலை நேர சிறப்பு வகுப்புகளை, பல பள்ளிகளில் நடத்துவதில்லை.

'ரிவிஷன் டெஸ்ட்' எனப்படும், மாதாந்திர திருப்புதல் தேர்வை முறையாக வைப்பதில்லை. வாராந்திரப் பாடம் நடத்தும் தயாரிப்பு திட்டம் முறையாக செயல்படுத்துவதில்லை.இப்படி பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எனவே, முதற்கட்டமாக ஆசிரியர்களின் பணி வருகையை உறுதிப்படுத்தவும், 'போர்ஷன்' முடித்தல் அறிக்கை தரவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்படும். ஆசிரியர்கள், ஓபி அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு முறை கொண்டு வரப்படும். அவ்வப்போது ஆய்வுகள் செய்து, ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பான் எண் அட்டை 48மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை

பான்' எண் அட்டைகளை, 48 மணி நேரத்தில் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வருமானவரித் துறையால் வழங்கப்படும், 'பெர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர்' என்பதன் சுருக்கம் தான், பான். வருமான வரி செலுத்துபவர்களும், வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வரவு - செலவு மேற்கொள்பவர்களும், பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, பொருட்கள், சேவை, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு, பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என, அந்த எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார்.இதன்மூலம், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தலாம் என்பது, அரசின் எண்ணம். ஆனால், இந்த பத்து இலக்க எண் கொண்ட அட்டை, 21 கோடி பேருக்கு தான் கிடைத்துள்ளது; இன்னமும், நுாறு கோடி பேருக்கு மேல், அட்டை வழங்கப்பட வேண்டியுள்ளது.

'ஜன் தன்' வங்கிக் கணக்குத் திட்டம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, பான் எண் அவசியம் என்பதால், அனேகமாக, அனைவருக்கும் பான் எண் வழங்கவும், அதை விரைவாக வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பான் எண் பெற, இப்போது, குறைந்தபட்சம், ஒரு வாரம் முதல், இரு வாரங்கள் வரை ஆகும் நிலையில், அதை, 48 மணி நேரத்தில் வழங்கவும், அதற்காக இணையதள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.பான் எண், 48 மணி நேரத்தில் கிடைக்கவும், அட்டையை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கவும், வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பான் எண் பெற, வயது சான்றிதழுக்கான ஆதாரமாக, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 'ஆதார்' அடையாள அட்டை நகலை வழங்கலாம் என, வருமானவரித் துறை தெரிவித்து உள்ளது.

எளிமையான வருமான வரி படிவம் இம்மாத இறுதியில் அறிமுகம்

எளிமையான வருமான வரி கணக்கு தாக்கல் படிவம், இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என, தெரிகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம், 2015 - 16ம் வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை, கடந்த மாதம் வெளியிட்டது. அதில், ஒருவருக்கு எத்தனை வங்கிகளில் கணக்கு உள்ளது என்பதையும், அவற்றில் உள்ள தொகை குறித்தும் தெரிவிக்கும் பிரிவு இடம் பெற்றிருந்தது.

மேலும், கடந்த நிதியாண்டில் வெளிநாடு சென்றிருந்தால், பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் வழங்கிய அலுவலகம், சென்ற நாடுகள், பயணங்களின் எண்ணிக்கை, பயணச் செலவுகள், அவற்றுக்கான நிதியாதாரம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் பிரிவும் காணப்பட்டது. இத்துடன், 'ஆதார்' எண்ணைக் குறிப்பிட, தனி பிரிவும் படிவத்தில் இருந்தது. இந்த விதிமுறைகள் கடுமையாக உள்ளதாக கூறி, எம்.பி.,க்கள், வரி வல்லுனர்கள், தொழில் அமைப்பினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ''

புதிய படிவம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்; எளிமையான படிவம் அறிமுகப்படுத்தப்படும்,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இது தொடர்பாக, நடப்பு பார்லிமென்ட் கூட்டம் முடிந்த பின்னர், நிதியமைச்சக அதிகாரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், செயல்படாமல் உள்ள வங்கி கணக்கு விவரங்களை கோரும் பிரிவை நீக்குவது உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதாக, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Saturday, May 09, 2015

பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை திரும்ப பெறப்படும்

பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்களது இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது.

போக்குவரத்துத் துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித் துறை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சனிக்கிழமை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதன் விவரம்:- அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் துண்டுப் பிரசுரங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும், குறும்படங்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டத்தில் போக்குவரத்துத் துறை, காவல் துறை உயர் அதிகாரிகளைப் பங்கேற்கச் செய்து பெற்றோர்களுக்கு படிக்கட்டு பயணம் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும். போக்குவரத்து காவல்துறையால் பேருந்துகளில் படிக்கட்டு பயணம் செய்யும் மாணவர்கள் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டால், இது தொடர்பாக மாணவரை பள்ளி நிர்வாகம் எச்சரிக்க வேண்டும்.

மேலும், அதே மாணவர் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்வதாகத் தகவல் பெற்றால், அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து அவர்களின் முன்னிலையில் அறிவுரை வழங்கப்பட வேண்டும். பேருந்து படிக்கட்டு பயணத்தால் உண்டாகும் விபத்து, அதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றி ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள், பெற்றோருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை தவிர்க்க மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும் மாணவர்களின் இலவசப் பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும் என்பதையும், மேலும் அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.

பேருந்து தினம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் இது போன்ற நிகழ்வில் பங்கேற்பதைத் தவிர்க்க உரிய அறிவுரை வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 19ல் மாணவர் தர வரிசைப்படி கல்லூரி பட்டியல் வெளியீடு

'கவுன்சிலிங்கில் முடிவெடுக்க வசதியாக, கடந்த ஆண்டில் மாணவர் தர வரிசைப்படியான கல்லூரிகள் பட்டியல், ஜூன், 19ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

'ரேண்டம்' எண்: சென்னை, தி.நகரில் நடந்த, 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

* கணிதம் - 100, இயற்பியல் - 50, வேதியியல் - 50 என, 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடுவோம். ஒரே, 'கட் - ஆப்' என்றால், கணிதத்தில் அதிக மதிப்பெண் பார்க்கப்படும். அதில் சமம் என்றால், இயற்பியலில் அதிக மதிப்பெண் பார்ப்போம். அதுவும் சமம் என்றால், நான்காவது, 'ஆப்ஷனல்' பாட மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவும் சரியாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவரைப் பார்ப்போம்.

அதிலும் சமம் என்றால், 'ரேண்டம்' எண்ணில், அதிக மதிப்புக்கு முன்னுரிமை. கடந்த ஆண்டு வெறும், 20 பேருக்குத் தான், 'ரேண்டம்' எண் பயன்படுத்தப்பட்டது.

* இறுதியாக ஒவ்வொரு மாணவருக்கும், ஜூன், 19ல், 'ரேங்க்' என்ற தரவரிசை பட்டியல் வெளியாகும். இந்த எண்ணும், 'கோடிங் ஷீட்' எண்ணும் தான், கவுன்சிலிங்கில் முக்கிய இடம் பெறும். ஜூன், 19ம் தேதி கடந்த ஆண்டு மாணவர்களின் தர வரிசைப் படி, கல்லூரிப் பட்டியல் வெளியாகும்.

* விண்ணப்பங்களை நேரில் அல்லது தபாலில் அனுப்பலாம். விண்ணப்பம் வந்ததும், 'பார்கோடை' சரி பார்த்து, விண்ணப்பம் வந்ததற்கான தகவல், இணையதளத்தில் உடனே பதிவாகும். தினமும், எட்டு முறைக்கு மேல் இணையத்தள தகவல், 'அப்டேட்' ஆகும். கவுன்சிலிங் வரை காலியிடப் பட்டியல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* விண்ணப்பங்களில் தவறு இருந்தால் தகவல் அனுப்புவோம். உடனே பதற்றப்பட வேண்டாம்; கூடுதல் தகவல்களை மெயிலில் அனுப்புங்கள். 'கால் லெட்டர்' கிடைக்காவிட்டாலும், பயப்பட வேண்டாம். ஆன் - லைனில் உங்கள் விண்ணப்ப எண்ணுக்கு, கவுன்சிலிங் தேதி தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு, இரண்டு, மூன்று மணி நேரம் முன் வந்து, அண்ணா பல்கலையில், 'கால் லெட்டர்' நகல் பெற்றுக் கொள்ளலாம்.

* மாணவர்களுடன் பெற்றோர் வருவது சிறந்த வழி. கவுன்சிலிங்கில் முடிவெடுக்கும் அறையிலும், மாணவருடன் நண்பர்களை விட, பெற்றோர் இருப்பது தான் நல்லது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று மாணவர்களோ, நமக்கு எதுவும் தெரியாது என்று பெற்றோரோ நினைக்க வேண்டாம்.

* கவுன்சிலிங் வரும் முன் உங்கள், 'கட் - ஆப்' கணக்கிட்டு, அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலுள்ள கல்லூரிப் பட்டியலில் உங்கள் மதிப்பெண்ணுக்கான குறைந்தது, இருபது கல்லூரிகள் மற்றும் பல பாடப்பிரிவுகள் தேர்வு செய்து கொண்டு வாருங்கள். கவுன்சிலிங் அறையில், நீங்கள் காலியிடத்துக்கு ஏற்ப கல்லூரியைத் தேர்வு செய்ய எளிதாக இருக்கும். அதற்கு முன் உங்கள் பட்டியலில் உள்ள கல்லூரிகளுக்கு பெற்றோருடன் சென்று நேரில் பார்த்து, ஆய்வக வசதி உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* கவுன்சிலிங் வரும்போது, முதல் கட்ட டிபாசிட், பட்டியலின், பழங்குடியினருக்கு 1,000 ரூபாய்; மற்ற பிரிவினருக்கு, 5,000 ரூபாய் வங்கி, 'டிடி' அல்லது ரொக்கப் பணமாகவோ கொண்டு வாருங்கள். பல்கலை வளாகத்தில் வங்கி உள்ளது. அங்கே,'டிடி' எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கட்டணம் கல்லூரிக்குச் சென்றதும், கல்விக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும்.

வெளிப்படையாக...: கவுன்சிலிங் மையம் அல்லது அண்ணா பல்கலை அருகில், போலியான ஆட்கள் சுற்றித் திரிய வாய்ப்புண்டு. நீங்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் போது, தெரியாத, அங்கீகாரம் இல்லாத ஆட்களின் குறுக்கீடுகள் அல்லது அறிவுரைகளுக்கு இடம் தர வேண்டாம். சில தனியார் கல்லூரிகள் அல்லது வேறு ஏஜன்ட்களின் தகவல்களுக்கு மயங்காதீர்கள். அண்ணா பல்கலைக்கழக ஒற்றைச் சாளர முறையில், நூற்றுக்கு நூறு சதவீதம் வெளிப்படையாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

9,10.ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச அட்லஸ்

தமிழகத்தில், தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதில், 'அட்லஸ்' புத்தகம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால், 'அட்லஸ்' புத்தகத்தை மாற்ற வேண்டி இருந்தது. திருத்தப்பட்ட புத்தக தயாரிப்பு தாமதமானதால், கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. வரும் கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தவுடன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமின்றி, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கும் இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.